CricketArchive

குமார் சங்ககாரா
by CricketArchive


Player:KC Sangakkara

DateLine: 21st August 2008

 

முழுப்பெயர்: குமார் சொக்சானந்த சங்ககாரா

 

பிறப்பு: 27 அக்டோபர் 1977. மாத்தளை, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர்.

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், மத்திய புராவின்ஸ் அணி, கொழும்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம், சர்வதேச லெவன், கண்டுரட்டா அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப், நொண்டேஸ்கிரிப்ட் கிரிக்கெட் கிளப், வார்க்விக்ஷையர் அணி.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஜூலை 20-23, 2000 அன்று இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையே காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஜூலை 5, 2000 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே காலேவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று நொண்டேஸ்கிரிப்ட் கிரிக்கெட் கிளப் - தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர். இலங்கை அணியின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். இடதுகை துவக்க வீரர். இலங்கை அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

 

ஜூலை 5, 2000 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே காலேவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முதலாக அறிமுகமானார். அதுமுதல் இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக இருந்தார். இவர் அறிமுகமான முதல் போட்டியில் 35 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னாளில், இவரது அதிரடி ஆட்டம் காரணமாக இலங்கை அணியின் துவக்க ஆட்டகாரராக மாறினார். இதே காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார்.

 

இவருக்கு முன் இருந்த விக்கெட் கீப்பரான ரமேஷ் கலுவிதாரனா பார்ம் இழந்து தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவருக்கு பதிலாக, இவர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது இலங்கை அணியை பலப்படுத்த 3-வது இடத்தில் சிறப்பான பேட்ஸ்மேன் தேவைப்பட்டார். இந்த இரண்டு தேவைகளையும் சங்ககாரா சிறப்பாக பூர்த்தி செய்ததால் அணியில் நிலையான இடத்தை பிடித்தார்.

 

2003-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இவருக்கு பேட்ஸ்மேன் பணி மட்டுமே வழங்கப்பட்டது. கீப்பர் பணி வழங்கப்படவில்லை. இத்தொடரில் பேட்ஸ்மேனாக தனது திறமையை நிரூபித்தார். இதையடுத்த காலகட்டத்தில் பார்ம் இழந்து தவித்தபோது அணியிலிருந்தும் விலக்கப்பட்டார்.

 

2003-04 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடரில் மீண்டும் விக்கெட் கீப்பராக இடம்பிடித்து விளையாடினார்.

 

இதன்பிறகு அணியில் நிலையாக இடம்பிடித்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கில் திறம்பட செயல்பட்டதால் 2005, அக்டோபரில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் ஒருதினத் தொடருக்கான சர்வதேச கிரிக்கெட் வாரிய உலக லெவன் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ஏப்ரல் 2006-ல் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இங்கிலாந்துக்கெதிரான ஐந்து ஒருதினப் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதன் வெற்றியில் இவரது பங்களிப்பும் இருந்தது. இதில் இரண்டு அரை சதங்கள் விளாசியும், கீப்பிங் திறமையால் எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்தும் அணியின் வெற்றிக்கு உதவினார்.

 

டெஸ்ட் போட்டிகளிலும் இவரது சாதனைக்கு அளவில்லை எனலாம். டெஸ்ட் அரங்கில் இவர் 15 சதங்கள் கண்டுள்ளார். அதில் 5 இரட்டை சதங்களும் அடங்கும். 2001-ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இதே அணிக்கெதிராக 105 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது அவர் ஆடிய பத்தாவது டெஸ்ட் போட்டியாகும்.

 

2001-02 ல், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியன் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் 230 ரன்கள் குவித்து, தான் ஆடிய 20-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதனால் ஆசியன் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் பட்டத்தை இலங்கை அணி வெல்லுவதற்கு காரணமாயிருந்தார். மேலும், இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

 

2004 காலகட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒரு இரட்டை சதமும், தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக ஒரு இரட்டை சதமும் விளாசி அசத்தினார். 2006-ல் தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜெயவர்தனேவுடன் இணைந்து புதிய சாதனையைப் படைத்தார். ஜெயவர்தனே 374 ரன்கள் அடிக்க, இவர் 287 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 624 ரன்கள் குவித்தது. 2007-ல் வங்கதேச அணிக்கெதிராக ஒரு இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

 

ஒருதின போட்டியிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி இவர் ஒரு திறமையான அதிரடி பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி, சிறப்பான விக்கெட் கீப்பர் என்ற திறமையையும் தன்வசம் வைத்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் 3 சதங்களை விளாசி இலங்கை அணி கோப்பையைக் கைப்பற்றக் காரணமாயிருந்தார்.

 

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அப்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் இவர் 1 சததமும் 1 அரை சதமும் விளாசினார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 20. ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive