CricketArchive

2வது டெஸ்ட்:- இந்தியா அபார வெற்றி
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 4th August 2008

 

 

வணக்கம்.

 

காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது. இதனால், கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்டில், ஓர் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்த்துக் கோண்ட இந்திய அணி, தொடரினை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

 

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களும், இலங்கை 292 ரன்களும் எடுத்தன. அடுத்து, 37 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது.

 

சௌவுரவ் கங்குலியும், வி.வி.எஸ். லட்சுமணும் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

 

கங்குலியும், லட்சுமணும் நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். ஆனால் இவர்கள் பொறுப்புணர்ந்து ஆடவில்லை. முரளிதரன் - மெண்டிஸ் கூட்டணியின் அபாரமான சுழற்பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன.

 

வி.வி.எஸ். லட்சுமண் 13 ரன்கள் எடுத்திருந்தபோது மெண்டிஸ் சுழலில் வீழந்தார். இவரையடுத்து சௌவுரவ் கங்குலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆட நினைத்த தினேஷ்கார்த்திக் மெண்டிஸ் சுழலில் ஒரு சிக்ஸரும், முரளிதரன் சுழலில் ஒரு சிக்ஸரும் அடித்தார். மறுபடியும் முரளிதரன் பந்துவீச்சில் சிக்ஸருக்கு ஆசைப்பட்டு சங்ககாராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இஒரது கணக்கில் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடங்கும்.

 

இவரையடுத்து, இதே ஓவரில் சௌவுரவ் கங்குலியும் (16 ரன்களில்) ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, இந்தியா தனது 2வது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 200 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தின்போது 69 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 5 விக்கெட்டுகள் வெறும் 14 ரன்களுக்கு வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

அஜந்தா மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், முரளீதரன் 3 விக்கெட்டுகளையும், சமிந்தா வாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து, இரண்டாவதுவது இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், இஷாந்த் சர்மா இருவரும் துல்லியமாகப் பந்துவீசி இலங்கை அணியை திணறடித்தனர்.

 

இஷாந்த் சர்மா வீசிய ஓவரின் 3வது பந்திலேயே வர்ணபுரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சங்ககாரா 1 ரன் எடுத்திருந்தபோது, அவரது விக்கெட்டை ஜாகீர்கான் வீழ்த்தினார். இவரையடுத்து வந்த கேப்டன் மஹேல ஜெயவர்தனேவும் 5 ரன்களில் இஷாந் சர்மாவின் வேகப்பந்து வீச்சுக்கு பலியாக, இலங்கை அணி 10 ரன்களை சேர்ப்பதற்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான வாண்டார்ட் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் சுழலில் வீழ, இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 37 ரன்கள் என்ற நிலையில் என சரிவை சந்தித்தது.

 

இதன்பிறகு சமரவீரா - தில்ஷான் ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை மீட்க போராடியது. இருவரும் இணைந்து 76 ரன்கள் சேர்த்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர். தேநீர் இடைவேளையின்போது இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது.

 

இன்னும் 198 ரன்களை சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இலங்கை அணி வசம் 6 விக்கெட்டுகள் இருந்தன.

 

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், இலங்கை வீரர்களை, இந்திய பந்துவீச்சாளர்கள் எளிதில் வீழ்த்தினர்.

 

திலகரத்னே தில்ஷான் 38 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார். இவரையடுத்து வந்த வீரர்கள் அனில் கும்ப்ளே - ஹர்பஜன்சிங் கூட்டணியின் சுழற்பந்து வீச்சில் சரணடைந்தனர். சமரவீரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

 

முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 136 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன்சிங் 51 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 20 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அனில் கும்ப்ளே 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

முதல் இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 251 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்களும் எடுத்த வீரேந்திர ஷேவாக் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

 

ஞாயிற்றுக்கிழமை நடந்த நான்காம் நாளிலேயே போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 4-ஆம் நாள் ஆட்டத்தில் மட்டும் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

 

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 8ம் தேதி கொழும்பு சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

 

இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:-

 

@ஒரு டெஸ்ட் போட்டியில் (2 இன்னிங்சிலும் சேர்த்து) 10 விக்கெட் கைப்பற்றும் சாதனையை ஹர்பஜன்சிங் இப்போட்டியோடு சேர்த்து 5வது முறையாக நிகழ்த்தினார். இந்திய வீரர்களில் கேப்டன் கும்ப்ளே அதிகபட்சமாக 8 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டும் அதற்கு மேலும் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

 

@இதேபோல மெண்டிஸும் இப்போட்டியில் (2 இன்னிங்சிலும் சேர்த்து) 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

@ இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் 750 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவிக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இவர் 751 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

நன்றி, வணக்கம்


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive