CricketArchive

3வது டெஸ்ட்: மூன்றாம் நாள் இந்தியா 161/5
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 11th August 2008

 

வணக்கம்

 

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

 

இந்த இரு அணிகளுக்கும் இடையே, கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

முன்னதாக ஆடிய இந்திய அணி இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸை 249 ரன்களுக்குள் இழந்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககாரா 107 ரன்களுடனும், பிரசன்னா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

இன்று காலை மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. சங்ககாராவும், பிரசன்னாவும் இணைந்து நிதானமாக விளையாடினர்.

 

அபாரமாக ஆடிய சங்ககாரா 14 பவுண்டரிகள் உள்பட 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தம்மிக பிரசாத், பிரசன்னாவுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.

 

பிரசன்னா 49 ரன்கள் எடுத்திருந்த போது ஜாகிர்கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் தனது அரைசதத்தை நழுவ விட்டார். இந்திய வீரர்களின் பந்து வீச்சில், அதிரடியாக விளையாடிய பிரசாத் 36 ரன்களும், அஜந்தா மெண்டிஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 147 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது.

 

துவக்க வீரர்களாக வந்த ஷேவாக், காம்பிர் ஜோடி வழக்கம் போல் அதிரடி காட்டியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் எடுத்தநிலையில், வீரேந்திர ஷேவாக், தம்மிக பிரசாத் பந்து வீச்சில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். இவர் 29 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் எடுத்தார்.

 

இவரையடுத்து ராகுல் திராவிட் காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஷேவாக்கை தொடர்ந்து கௌதம் காம்பிரும் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

 

இந்நிலையில் நான்காவது வீரராக சச்சின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சௌவுரவ் கங்குலி களமிறங்கினார். வந்த வேகத்தில் முரளிதரன் பந்தில் ஒரு சூப்பர் சிக்ஸர் அடித்து அசத்தினார். 28வது ஓவரில் முரளிதரன், கங்குலியை ஆட்டமிழக்கச் செய்தார். இவர் கணக்கில் 18 ரன்கள் அடங்கும்.

 

இவரையடுத்து வந்த பார்த்தீவ் படேல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறினார். தினேஷ் கார்திக்கிற்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை வீண்டித்து, வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து எரிச்சலை ஏற்படுத்தினார்.

 

இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் ஆறாவது வீரராக களமிறங்கினார். ஆனால், இம்முறையும் இவர் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இத்தனைக்கும், இவர் ஆடும் 150 டெஸ்ட் இது என்ற பெருமை வேறு...

 

இதற்கு முன்னதாக சச்சின் தெண்டுல்கரை ஆட்டமிழந்தார் என அறிவிக்கக் கோரி இலங்கை அணியினர் 2 முறை நடுவரின் தீர்ப்பை, மூன்றாவது நடுவரின் மறு ஆய்வுக்குட் படுத்தினர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு சச்சின் தெண்டுல்கர், மெண்டிஸ் சுழலில் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்ததாக களநடுவர் அறிவித்தார்.

 

இதை எதிர்த்து சச்சின் மூன்றாவது நடுவரிடம் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கேட்டுக் கொண்டார். ஆனால் இது சச்சினுக்கு எதிராகவே அமைந்தது. இத்தொடரில் கடந்த ஐந்து இன்னிங்சிலும் மெண்டிஸ் பந்துவீச்சிலிருந்து தப்பிய சச்சின் இன்று முதன்முறையாக மெண்டிஸ் பந்து வீச்சில் வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரையடுத்து திராவிட்டுடன், வி.வி.எஸ். லட்சுமண் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய திராவிட் பார்முக்கு வந்து ஆறுதல் தந்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

திராவிட் 46 ரன்களுடனும், லட்சுமண் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை சார்பில் மெண்டிஸ், பிரசாத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

இன்றைய சாதனை:-

 

அறிமுகமான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நேற்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் படைத்தார். சச்சின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தற்போதைய டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் எடுத்து, இச்சாதனையைப் படைத்தார். முன்னதாக இங்கிலாந்து வீரர் அலெக் பெட்சர் 1946ல் நடந்த இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

 

இன்றைய சோதனை:-

 

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் சச்சின் (11,877), முதலிடத்தில் இருக்கும் லாராவை முந்துவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இத்தொடரின் துவக்கத்தில் இச்சாதனை படைக்க சச்சினுக்கு 172 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 6 இன்னிங்சிலும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து, ரசிகர்களை ஏமாற்றினார்.

 

இஷாந்த் சர்மா பந்துவீசமாட்டார்...

 

முதல் இன்னிங்சில் பந்துவீசிய போது காயமடைந்த இஷாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச மாட்டார் என இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,“ இஷாந்த் சர்மாவுக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்க்கப்பட்டது. இதில், இவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள தெரிய வந்துள்ளது. இவரால் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச முடியாது,” என்றார்.

 

நன்றி, வணக்கம்


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive